வரலாற்றுச் சுருக்கம்

   தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கத்தால் 1951 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புதுக்கல்லூரி முன்னணி உயர்கல்வி நிறுவனங்களுள் ஒன்றாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி இஸ்லாமியச் சமுதாயத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனமாயினும் பிற வகுப்புகளைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்களுக்கும் கல்வி கற்கும் வாய்ப்பளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.முதுநிலை நிலையில் பத்துக்கும் மேற்பட்ட படிப்புகள் இக்கல்லூரியில் பயிற்றுவிக்கப்படுகின்றன.

   பேராசிரியர் தமிழறிஞர் பாலூர் கண்ணப்ப முதலியார் அவர்கள் தமிழ்த்துறையின் முதல் தலைவராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றினார். இதன் பின்னர், தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்ற பேராசிரியர் நா.பாண்டுரங்கன் அவர்களின் சீரிய முயற்சியால் 1983 ஆம் ஆண்டு தமிழ் முதுகலைப் படிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. சிறப்புக்குரிய இம்முதல் அணியில் 20 மாணவர்கள் சேர்ந்து தேர்ச்சியடைந்தனர். முனைவர் நா. பாண்டுரங்கன் அவர்களைத் தொடர்ந்து பேராசிரியர் சா. அமீது அவர்கள் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றினார். இதன் பின்னர் பணி ஒய்வு பெற்ற பேராசிரியர் சா. அமீது அவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராகப் பணியாற்றிச் சிறப்பித்தார்.
   இதன்பின்னர் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்ற பேராசிரியர் குளச்சல் சாகுல் அமீது அவர்களின் முயற்சியால் 1992 ஆம் ஆண்டு ஆய்வியல் நிறைஞர் (M.Phil) என்னும் ஆராய்ச்சிப் படிப்பு தொடங்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட அறிந்தேற்புக்குழுவில் முனைவர் பொற்கோ அவர்கள் ஒருங்கிணைப்பாளராகவும் முனைவர் கே. நாகு அவர்கள் உறுப்பினராகவும் வருகை தந்து ஆய்வு செய்து அறிந்தேற்பு வழங்கிச் சிறப்பித்தனர்.
   சீரும் சிறப்புமிக்க இத்தமிழ்த்துறையில் பேராசிரியர் டி. புருஷோத்தமன், பேராசிரியர் மா.ரா. இளங்கோவன், பேராசிரியர் கேப்டன் அமீர் அலி, பேராசிரியர் மே.வீ. சக்கரவர்த்தி, முனைவர் ஈரோடு தமிழன்பன்,மக்கள் கவிஞர் இன்குலாப், புலவர் உசேன் ஆகியோர் தமிழ்த்துறை வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றியுள்ளனர்.
   தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பு வகித்த பேராசிரியர் ஒ.அ. காஜாமுகைதீன் அவர்களின் நன்முயற்சியால் 1996 ஆம் ஆண்டு பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வும் 2000 ஆம் ஆண்டிலிருந்து முழுநேர ஆய்வும் தொடங்கப்பட்டது. தொடர்ந்து பேராசிரியர் அ. காதர்பாட்சா தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றுச் சிறப்பித்தார். இது மட்டுமில்லாமல், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி அருத்தொண்டாற்றினார்.இத்துடன் நாட்டு நலப்பணிச் செயல் வீரராகவும் பல்லாண்டுகள் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.ஆய்வு நெறியாளராகத் திறம்படச் செயல்பட்ட முனைவர் கம்பம் சாகுல் அமீது அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் துறைப்பேராசிரியர்கள் உட்பட பத்து பேர் முனைவர் பட்டம் பெற்றனர்.இன்று செம்மார்ந்த ஆய்வுத்துறையாகப் புதுக்கல்லூரி தமிழ்த்துறை இயங்கிவருவதற்கு இவருடைய பங்களிப்பும் காரணம் எனலாம்.இன்று ஆறு பேராசிரியர்கள் நெறியாளர்களாகவும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
   தொடர்ந்து 2008 ஆம் கல்வியாண்டு முதல் முனைவர் ஹ.மு.நத்தர்சா தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றுச் சிறப்பித்தார். சிறந்த சிறுகதைப் படைப்பாளராகவும் பேச்சாளராகவும் விளங்கியதோடு பல்வேறு ஆய்வுப் பணிகள் சிறக்க வழிகோலினார்.கல்லூரி நிதியாளுநராகவும் பொறுப்பு வகித்தார். அடுத்து 2014 ஆம் கல்வியாண்டிலிருந்து முனைவர் மு.இ. அகமது மரைக்காயர் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி, துணை முதல்வராகவும் விளங்கினார். 2016 ஆம் கல்வியாண்டிலிருந்து முனைவர் மு.கலீல் அகமது அவர்கள் தலைமையேற்றுத் துறையைச் சிறப்பாக வழிநடத்தியதுடன் கல்லூரி நிதியாளுநராகவும் பொறுப்பு வகித்தார்.
   2019 - 20 ஆம் கல்வியாண்டிலிருந்து முனைவர் மு.அப்துல் ரசாக் அவர்கள் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றுத் துறையைச் சீரும் சிறப்புமாக நடத்தி வருகின்றார். 2021 ஆம் கல்வியாண்டிலிருந்து கலைப்புல முதன்மையராகவும்பொறுப்பாற்றிவருகிறார். தமிழ்த்துறையில் இளங்கலைத் தமிழ் படிப்பு இல்லையென்ற குறை களையப்பட்டு 2019 ஆம் ஆண்டிலிருந்து பி.ஏ. தமிழ்தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
   ஆக்கப்பூர்வமான பல்வேறு பணிகளைச் செய்து வருகின்ற தமிழ்த்துறையில் இதுவரை 28 பேர் முனைவர் பட்ட ஆய்வு (Ph.D) முடித்து பல்வேறு தளங்களில் பணி செய்து புதுக்கல்லூரிக்குப் பெருமை சேர்த்து வருகின்றனர். ஆற்றல் மிகு ஆறு பேராசிரியர்களின் நெறியாளுகையின் கீழ் இன்று 25 பேர் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்த்துறை ஆய்வு மாணவர்கள் தமிழ் கூறும் நல்லுலகில் தலைசிறந்த ஆய்வுகளைச் செய்து தரணியில் புகழ் பெற்று வருகின்றனர்
   தமிழ்த்துறையில் தொடர்ந்து பல்வேறு கருத்தரங்குகளும் படைப்பரங்குகளும் மாணவர்திறன் வளர்ப்பு போட்டிகளும் பல்வகை ஆராய்ச்சிகளும் நடத்தப்பட்டு தலைநகரின் தனிநிகர் துறையாகவும் தமிழ்நாட்டின் திறன்மிகு துறையாகவும் பீடுநடை போட்டு விளங்கி வருகின்றது. இத்தகைய நீடு புகழ்பெற்ற தமிழ்த்துறையில் முற்றிய தமிழை முற்றாகக் கற்றபேராசிரியர்கள் தமிழ் வளர்க்க அரும்பணியாற்றி வருகின்றனர்.